உலகிலேயே பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ., வருமான வரியை முறையாக செலுத்தவில்லை. சுமார் 372 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது இதை விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) வருமான வரிச் சலுகை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. தற்போது வர்த்தக நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதால், சலுகை எதுவும் இல்லை. 2009-10ம் ஆண்டு வருமானத்துக்கு 413 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டது. இதனை முழுமையாக செலுத்தவில்லையாம்.
“கடந்த 2009-10ல் பி.சி.சி.ஐ., 964 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதற்கு 413 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சுமார் 41 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள சுமார் 372 கோடி செலுத்தப்படவில்லை. இதனை வசூலிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, 2010-11, 2011-12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் இன்னும் தாக்கல் செய்யப்படாமல், நிலுவையில் உள்ளன,”என்றார்.
பி.சி.சி.ஐ யின் நிர்வாகத் தலைவர் ரத்னாகர் ஷெட்டி தெரிவிக்கையில், இது சம்பந்தமாக இன்னும் எந்த வித நோட்டீசும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.